புதன், 7 டிசம்பர், 2011

சித்தர்கள் தரிசனம் # 1



 அருப்புக்கோட்டை ஸ்ரீ அய்யா சுவாமி (எ)  ஸ்ரீ வீரபத்திர சுவாமி சித்தர் 



 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரில் , அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ வீரபத்திர சுவாமி கோவில் .

 ஸ்ரீ அய்யா சுவாமி என்று மக்களால் அழைக்கப்பட்ட ஸ்ரீ வீரபத்திர சுவாமி , திருச்சுழி     அருகே உள்ள பள்ளிமடம் என்ற ஊரினில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாக அவதரித்து உள்ளார்கள். அவரின் இளமைக் காலம் குறித்து அதிகம் தெரியவில்லை. சில காலங்கழிந்த  பின் , அங்கிருந்து புறப்பட்டு அருப்புக்கோட்டை நகருக்கு வந்த சுவாமிகள் பின்பு நிரந்தரமாக இங்கேயே தங்கி விட்டார்கள். ஆலயம் அமைந்துள்ள பகுதி சாலியர் சமுதாய மக்கள் அதிகமாக வாழும் பகுதி ஆகும்.

அந்நாளில் இப்பகுதி மக்கள் அதிகம் படிப்பு அறிவு இன்றி விளங்கியதால் , சுவாமிகள் இப்பகுதி மக்களுக்கு படிப்பறிவினை வழங்கி உள்ளார்கள். தன்னிடம் இருந்த திருவோட்டில் தினமும் இரவில் பிக்ஷை ஏற்கும் சுவாமிகள் , அவ்வுணவினை அன்று இரவிற்கும் மறுநாள் பகலுக்கும் என வைத்துக் கொள்வார்கள்.

 லீலைகள் :

தனது காலத்தில் சுவாமிகள் புரிந்த பல லீலைகள் தற்போது அறியப்படாமல் மறைந்து விட்டது. சில சம்பவங்கள் மட்டுமே தெரிகிறது.

ஒருமுறை சுவாமிகள் பிக்ஷை கேட்டுச் சென்ற வீட்டில் உள்ள குழந்தைக்கு உடல்நலம் இன்றி அழுதுக் கொண்டே இருந்துள்ளது. சுவாமிகள் ஆசிர்வதித்து விபூதி அளித்த பின் அக்குழந்தை குணமாகி உள்ளது.

" இவ்விடத்திலே ஒரு ஆலயம் வரும், இவ்வீதியிலே தேரோட்டம் நிகழும் " என சுவாமிகள் முன்பே கூரியதின்படியே , அருகிலேயே ஆயிரங்கண் மாரியம்மன் ஆலயம் கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி உள்ளது. அம்மனின் திருத்தேர் வலமும் நடைபெறுகிறது.

ஒருமுறை சுவாமிகள் பழனி மலை சென்று இருந்தபோது , அங்கு குடம் குடமாக பால் அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டு இருந்துள்ளது. சுவாமிகள் தம்மிடம் இருக்கும் திருவடு நிறைய பழைய சாத நீரைக் கொடுத்து அதனையும் அபிஷேகம் செய்யும்படிக் கூறி உள்ளார்கள். அங்குள்ள பூசாரிகள் அதனை மறுத்து அத் திருவோட்டினை தூக்கி எரிந்து விட்டனர். ஆயின் அத்திருவோடு கீழே விழாமல் , அந்தரத்திலேயே நின்று உள்ளது. அதனைக் கண்டு அஞ்சி அதிசயித்த பூசாரிகள் , சுவாமிகளின் மகிமையை உணர்ந்து , அவரிடம் மன்னிப்பும் கேட்டு , அந்த நீரை அபிஷேகம் செய்து உள்ளனர் எனும் செய்தியும் அறியப்படுகிறது.

சமாதி :

சுவாமிகள்  மாசி மாதம் புனர்பூச நக்ஷத்திரம் அன்று, உயிருடன் சமாதியில் அடங்கி உள்ளார்கள்.வருடம் சரியாகத் தெரியவில்லை. சுவாமிகள் சமாதியான தினத்திலே , திருசெந்துரிலே மாசி விழாவில் ஷண்முக விலாசம் திருநாள் நடைபெற்றுக் கொண்டு இருந்ததாம். சுவாமிகள் அதே நாளில் அங்கேயும் தரிசனம் கொடுத்து உள்ளார்கள்.


ஆலய அமைப்பு :

அருப்புகோட்டை - விருதுநகர் பிரதான சாலையிலேயே இக்கோவில் அமைந்து உள்ளது.முன்மண்டபம் , கருவறை  என்ற  அமைப்பில் உள்ளது. கருவறையின் இருபுறமும் விநாயகர் , முருகன் சிலைகள் உள்ளன. பேச்சி அம்மன் சன்னதியும் அமைந்துள்ளது. சாலிய சமுதாய மக்கள் வழிபடும் வகையிலே சாலிய மகரிஷியின் சிலையும் அமைந்து உள்ளது.
கருவறையிலே லிங்க உருவினிலே சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்து உள்ளது.நாயக்கர் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர்தாம் இவ்வாலயத்தை அமைத்துள்ளதாக கூறுகிறார்கள்.

சுவாமிகள் பயன்படுத்திய ருத்ராக்ஷம் லிங்கத்தின் மீது அணிவிக்கப்பட்டு உள்ளது.சுவாமிகள் பயன்படுத்திய திருவோடும் பாதுகாத்து வைக்கப்பட்டு உள்ளது.

சுவாமிகள் நிறைய ஓலை சுவடிகள் எழுதி இருப்பதாகத் தெரிகிறது. அவை பழைய வட்டெழுத்து வடிவில் உள்ளதாகவும் , தற்போது அவை ஒரு தனி நபரிடம் இருப்பதாயும் ஆலயத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

 சுவாமிகளின் சமகாலத்தே பொன்னம்பல சுவாமிகள் என்பவரும் வாழ்ந்து உள்ளதையும் , அவரது சமாதி அருகில் உள்ள மாரியம்மன் கோவில் அருகிலேயே உள்ளதையும் தெரிவித்தனர்.

வழிபாடுகள் :

நித்திய பூஜைகள் நடைப்பெறுகின்றன. சுவாமிகளின் சமாதி நட்சத்திரமான புனர்பூசம் அன்று , மாதம் தோறும் சைவ திருமுறை ஓதுதல் நடைபெறுகிறது.
அன்று ஒன்பது வகையான அபிஷேகமும்  ,  பிரசாதம் வழங்குதலும் நடைபெறுகிறது.
ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழன் மாலையில் திருவாசகம் ஓதுதல் நடைபெறுகிறது.அம்மாவாசை அன்றும் ஒன்பது வகையான அபிஷேகமும் , அன்னதானமும் நடைபெறுகிறது.
சுவாமிகளின் சமாதி நாள் அன்று வருடந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

அனுபவம் :

"முழுமையான நம்பிக்கையோடும் , சரணகதியோடும் வழிபாட்டால் சுவாமிகளின் அருள் வழிநடத்துவதை உணரமுடியும் " என்றுக் கூறுகிறார் திரு.தமிழரசன் என்பவர். இவர் கோவிலின் அருகிலேயே சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
"எனது மகளுக்கு பிரசவ வலி எடுத்து ஒன்றரை நாள் வரையிலும் குழந்தை பிறக்க வில்லை. இனி ஆபரேஷன்தான் செய்ய வேண்டும் எனும் சூழலில் , சுவாமிகளை மனதார வேண்டிக்கொண்டேன். அடுத்த இருபது நிமிடங்களில் என் மகளுக்கு சுக பிரசவமே நடந்து விட்டது." என பரவசமாகக் கூறுகிறார் அவர்.

நாமும் சுவாமிகளின் அடி பணிந்து அருள் பெறுவோம்.

குருவே சரணம்.
 

 


ஞாயிறு, 4 டிசம்பர், 2011

ஸ்ரீ அரவிந்த அஞ்சலி

இன்று ஸ்ரீ அரவிந்தர் குரு சமாதி தினம் 

பூரண யோகம் தந்த பூரணனே !
பொன்னடி பணிகின்றேன் -
 புதுயுக காரணனே !

அஞ்சலிகள் ஆயிரம் செய்தாலும் தகுமோ
 தம்  அவதார காரணத்திற்கு.     
ஒவ்வொரு கணத்தினில் நன்றிகள்
நவின்றாலும் போதுமோ .

யுகத்தின் மாற்றத்திற்காய்
உவந்தளித்தாய் தேகத்தை !
விளம்பிடவும் அரிதாமோ
 தாம் செய்த தியாகத்தை !

 நன்றி ! எனும் வார்த்தையைத் தவிர
 வேறு ஏதும் அறியா எளியவனின்
 அஞ்சலியை
 தம் அவதார நிறைவு நாளில்
தம் தாளிலே அர்ப்பணிக்கின்றேன் .


 சரணம் ஸ்ரீ அரவிந்த குருநாதா!