ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

பாலையம்பட்டி ஸ்ரீ சுப்பு ஞானியார் ஜீவ சமாதி


 ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம் 


 அருப்புகோட்டை to மதுரை செல்லும் வழியிலே பாலையம்பட்டி எனும் ஊர் இருக்கிறது. இங்கே பிரதான சாலையிலேயே ஸ்ரீ விசாலாக்ஷி அம்பாள் சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. தற்போது அதிகம் முக்கியத்துவம் இல்லாமல் இந்த ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்திற்கு எதிர்புறம் ஒரு தெப்பகுளம் அமைந்துள்ளது. நீராவி குளம் என அதை அழைக்கின்றனர். தற்போதும் ஊர் மக்கள் இந்த குளத்தினை நீராட பயன்படுத்தி வருகின்றனர். 


 இந்தகுளத்தின் கரையிலே அமைந்துள்ளது ஸ்ரீ சுப்பு ஞானியார் ஜீவ சமாதி. சிறிய ஆலய அமைப்பிலே இந்த ஜீவ சமாதி அமைந்துள்ளது. முன் மண்டபம் ,கருவறை , மதில் சுற்று என ஆலயம் அமைந்துள்ளது. மதில் சுற்றிலே வில்வம் , திருநீற்று பச்சிலை , வெள்ளை எருக்கு மற்றும் சில பூஞ்செடிகள் வைத்து நந்த வனம் அமைத்துள்ளனர். 

வரலாறு :
இந்த சித்தர் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு ஜீவ சமாதி அடைந்ததாகக் கூறுகிறார்கள். பாலையம்பட்டி எனும் இந்த  ஊரிலேயே காசு கடை செட்டியார் குலத்திலே பிறந்து வளர்ந்த சுவாமிக்கு அந்நாளைய வழக்கத்தின்படி இளம் வயதிலேயே திருமணம் நடந்துள்ளது. 

உரிய வயது வந்ததும் சாந்தி முகூர்த்தம் வேளைக் குறித்து உள்ளார்கள் அவரது இல்ல பெரியவர்கள். அந்நாளிலே வீட்டைவிட்டு வெளியேறி  சன்யாச வாழ்வை வாழத் துவங்கியுள்ளார்கள். 

இந்த சித்தரைக் குறித்து மேலும் தகவல்கள் தெரியவில்லை . மாசி மகம் அன்று குறிப்பிட்ட இடத்தை தேர்வுசெய்து அங்கே ஜீவ சமாதி அடைந்ததாகக் கூறுகிறார்கள். இவர் வாழ்ந்தக் காலத்திலே புரிந்த லீலைகள் ஒன்றும் தெரிய வரவில்லை. தலைமுறை இடைவெளியால் சரியான தகவல்கள் இல்லை . 

 


வழிபாடு 

மத்தியில் சில காலங்கள் இந்த ஆலயம் சரியான பராமரிப்பின்றி இருந்துள்ளது. தற்போது இவரது குடும்பத்தின் வம்சாவழியினர் பிரதோஷம் அன்று தொடர்ந்து வழிபாடு செய்து வருகின்றனர். தற்போது விருதுநகரில் வசிக்கும் அவர்கள்தாம் இந்த ஆலயத்தினை புதுபித்து நித்ய பூஜைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். 

அருகில் உள்ள கிராம மக்களும் தினசரி வழிபாட்டிலே கலந்துக் கொள்கின்றனர். இன்னமும் கூட சில உள்ளூர் மக்களிடம் , இந்த ஆலயம் ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமானது எனும் எண்ணத்தினைக் காண முடிகின்றது. 

கருவறையிலே சித்தரின் ஜீவ சமாதி மிகவும் சாநித்தியதோடு காணபடுகிறது. முதல் முறை பார்க்கும் போதே நம்மை மிகவும் ஈர்க்கும் விதத்திலே சிவலிங்க திருமேனி அமைந்துள்ளது. முன்மண்டபத்திலே நந்தியினை பிரதிஷ்டை செய்துள்ளனர். வலப்புறம் விநாயகரும் , இடப்புறம் சுப்ரமணியரும் உள்ளனர். 

வரும் மாசி மகம் அன்று சித்தருக்கு குரு பூஜை அன்னதானதுடன் நடைபெற உள்ளது. அன்றைய தினத்திலே இங்கே சுமார் 12 சாதுக்கள் வரை பூஜையிலே கலந்துக் கொண்டு அன்னதானம் பெறுவார்கள். அவர்களிடம் மடி பிச்சை கேட்டு அந்த அன்னத்தினை உண்டால் , ஒரு வருட காலத்திற்குள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது அனுபவம் .  
 
 

1 கருத்து:

  1. பக்தி யுகத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி திரு.சரவணன் .- "பக்தியுகம்" கிருஷ்ணா

    பதிலளிநீக்கு