செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012



இறைவனின் உதவி தோற்றத்திற்கு பெரியதாகத் தெரியாது, 
ஆனால் செயலில் ஆற்றலுடையதாக  இருக்கும். 
- ஸ்ரீ அன்னை 

புதன், 1 ஆகஸ்ட், 2012

கேமராவில் பதிவான கிரியா யோகா பாபாஜியின் பொன் ஒளி ரூபமான கால்



கேமராவில் பதிவான கிரியா யோகா  பாபாஜியின்  பொன் ஒளி ரூபமான    கால் 

மகா அவதார் பாபாஜி என்று உலகமெல்லாம் வணங்கப்பெறும் , பாபாஜி நம் தெய்வத் தமிழ் நாட்டில் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப் பேட்டையில் அவதாரம் செய்த மகான். இவர்தம் இயற்பெயர் நாகராஜன் என்பதாகும்.  இலங்கையிலும் பின்னர் நம் தமிழ்நாட்டு திருக்குற்றால மலையிலும் தனது குருமார்களால் தீட்சையும் உபதேசமும் பெறப்பெற்று , பின்னர் இமாலயத்தில் பல்லாண்டுகள் தவத்தில் ஆழ்ந்து உயர் ஞானானுபவம் பெற்றவர். 

கிரியா யோகம் எனும் ,மிக உயர்ந்த மார்க்கத்தினை  உலகெங்கும்  பரப்பிட சீடர்களை தேர்ந்தெடுத்து , அவர்களை உயர் குருமார்களாக உருவாக்கி உலகிற்கு அளித்தவர். ஸ்ரீ மகாசயர் ,  ஸ்ரீ யுக்தேஸ்வரர் மற்றும் பரமஹம்ச ஸ்ரீ யோகானந்தர் ஆகியோர் பாபாஜி வழியினில் கிரியா யோகம் எனும் உயர் யோக மார்க்கத்தினை உலகினில் நன்கு வேரூன்ற செய்துள்ளார்கள். 

நம் தமிழ் நாட்டில் ஸ்ரீ.வி.டி.நீலகண்டன் , ஸ்ரீ எஸ்.ஏ.ஏ. ராமையா ஆகிய மகான்கள் கிரியா யோக மார்க்கத்தினை   வேரூன்றச் செய்யும் பணியினைச் செய்துள்ளார்கள். 

இன்றளவும் இமய மலையில் பாபாஜி வாழ்ந்து வருவதாகவும் , தன்னை உண்மையினில் நாடி வருபவர்களுக்கு தன்னையே தருவதாகவும் நாம் கூறக் கேட்டு உள்ளோம்.  இது உண்மைதானா ? பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவர் வாழுவது சாத்தியமா ? இவை கட்டு கதைகளாக இருக்கும் , என எண்ணுபவர்களும் வாதிடுபவர்களும் உண்டு. 

ஆனால்  சத்தியத்தை ஸ்பரிசித்தவர்களுக்கே அந்த உண்மை புரியும். இன்றளவும் பாபாஜி இருக்கிறார் என்பதற்கு சாட்சியம் அளிக்கும் விதமாக அண்மையினில் ஒரு அதிசயத்தினை பாபாஜி தன் பக்தர் ஒருவர் மூலம் நிகழ்த்திக் காட்டி உள்ளார்கள்.

சென்னை பூவிருந்தவல்லி ( பூந்தமல்லி) யில் வசித்து வருபவர் திரு.பிரம்மன் குமார் அவர்கள். தஞ்சை மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட இவர், வாழ்விலே பல்வேறு தளங்களில் பயணித்து , இறுதியில் இறைவன் மட்டுமே உண்மை , அவனை பற்றிகொள்வது மட்டுமே தன் வாழ்வின் நோக்கம் என்பதனை புரிந்துக் கொண்டு , இறைவனை தேடும் விதமாக தனது வாழ்க்கை பாணியினை மாற்றிக் கொண்டார்கள். 
தனது உலகியல் தேவைகளை   , இறைவன் அவருக்கு அருளிய ஜோதிட ஸாஸ்த்திரத்தின் மூலம் பூர்த்தி செய்துக் கொண்டு எளிமையாக வாழ்ந்து வரும் இல்லற யோகியாக வாழ்ந்து வருகிறார்கள். 

கடந்த 2009 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் அவர் தங்கி இருந்த சமயம் , ஒரு இரவினில் பாபஜியினால் இவர் ஆட்கொள்ளப் பட்டார். தன்னை ஆட்கொண்டது பாபாஜிதான் என்பதை கூட அறியாது, ஆட்கொண்டது  யார் என அவர் தேடத் துவங்கினார். அப்போதுதான் அவர் பாபாஜியை யார் என அறியத் தொடங்கி, பாபாஜி குறித்து  மேலும் மேலும் அறிந்துக் கொள்ளத் தலைப் பட்டார். 

பாபாஜி குறித்து புத்தங்கள் மூலம் அறிந்துக் கொள்வதை விட , தனது குருவினைக் குறித்த விவரங்களை , அவர் அருளாலேயே அறிந்துக் கொள்ள வேண்டும் என விரும்பிய அவர், இமய மலைக்கு பயணப்பட்டார். அங்கே அவருக்கு பல அனுபவங்களை பாபாஜி அருளினார்கள். தொடர்ந்து வருடம்தோறும் இவரது இமய மலை பயணம் தொடர்ந்தது. 

இந்தவருடம் , ஜூலை மாதம் அவரது பயணம் இமயமலையை நோக்கி அமைந்தது. செல்லும் பொழுது தனது குருநாதரான கிரியா பாபாஜிக்கு மானசிகமாக சமர்ப்பிக்கும் நோக்கோடு , பாதுகைகளை செய்து எடுத்துக் கொண்டு சென்று , பாபாஜியின் குகையினில் வைத்து, அதன் sமேல் பாபாஜியின் சிறிய போட்டோ ஒன்றை வைத்து  அந்த பாதுகைகளுக்கு பூஜை செய்து வழிபாடுகளை செய்துள்ளார். அப்போது , அந்த குகையினில் வேறு யாரும் இல்லை. இவரும் இவரது நண்பர் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார்கள்.

தாங்கள் செய்யும் பூஜையின் ஞாபகமாக அங்கே சில புகை படங்களை எடுத்துக் கொண்டு , சென்னை திரும்பி உள்ளார்கள். சென்னையில் பிலிமை டெவெலப் செய்து பார்த்த அவர் ஆனந்தத்தின் உச்சிக்கே சென்று விட்டார். அவர் பாத பூஜை செய்    பாதுகை போட்டோவில் , பாபாஜி யின் தங்க நிற கால் ஒன்று , முழங்காலில் இருந்து கணுக்கால் வரை பதிவாகி இருந்ததை கண்டு  ஆச்சர்யம் அடைந்தார். சில புகை  படங்களில்  , பாபாஜியின் படத்தினில்     முகத்தினில்  ஒளி ரூபமாகவும் ஒரு படத்தில்  முகம்       நாக ரூபமாகவும் காணப்படுகிறது.  

தான் பெற்ற அந்த அனுபவம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் எனும் ஒரே நோக்கோடு , அந்த புகைப்படத்தை நமக்கு கொடுத்து இன்டெர் நெட்டில் வெளியிடச் சொன்னார்கள். நாமும் இந்த அதிசய படத்தினை பக்தி யுகத்தில் வெளியிடுவதை பாக்கியமாகக் கருதுகிறோம். 

திரு.பிரம்மன் குமார் சுவாமி
ஸ்ரீ அகத்தியர் ஜோதிட நிலையம் 
பூந்தமல்லி
சென்னை
+91  9444257917