புதன், 30 மே, 2012

ஒரு புத்தகமும் - சில விஷயங்களும்....



நாம் அடிக்கடி ஏதாவது புத்தகங்கள் வாசிக்கிறோம் . அதில் மனதிற்கு நிறைவை தந்த விஷயங்கள் இங்கே.....


"நடமாடும் தெய்வம் " என வணங்கப்பட்ட , காஞ்சி மாமுனிகள் ஸ்ரீ பரமாச்சார்ய சுவாமிகள் குறித்த  புத்தகம் ஒன்றை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மகாஸ்வாமிகள் குறித்த எத்தனையோ புத்தகங்கள் வெளி வந்துள்ளன. நான் வாசித்த புத்தகம்  "கச்சிமூதூர் கருணாமூர்த்தி " என்பதாகும்.

ஸ்ரீ மடத்திலே மகாஸ்வமிகளுடன் இருந்து தொண்டு புரிந்த திரு. ஸ்ரீ மடம் பாலு அவர்கள்  , மகாஸ்வாமி குறித்து தாம் கண்டு, கேட்டு, உணர்ந்த அனுபவங்களை ,திரு சத்யகாமன் அவர்கள் புத்தக வடிவிலே நமக்கு கொடுத்துள்ளார்கள்.

அதில் ஒரு பகுதி ....



ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை 
   
சாயங்காலம் ஐந்து மணி. பெரியவாள், ஸ்நானத்திற்காக உரிய இடத்தில் வந்து உட்கார்ந்தார்கள்.

அவர்கள் வஸ்த்திரத்தில் ஒரு பெரிய சடைப்பூரான் இருந்ததை தொண்டர் பாணாம்பட்டு கண்ணன் பார்த்து விட்டார். பரபரப்புடன் கைகளை நீட்டி , காவி ஆடையை வாங்கிக் கொள்ள முயன்றார்.

"என்ன அவசரம் ? " என்றார்கள் , பெரியவாள்.

"பெரிய சடைபூரான் இருக்கு வஸ்திரத்திலே..."

பெரியவா, கண்ணனிடம் வஸ்த்திரத்தைக் கொடுத்தார்.

" பூரானை ஒண்ணும் செய்யாதே .. ஹிம்ஸை செய்யாதே ... ஜாக்கிரதையா வெளியே எடுத்துப் போடு. ... பூரான் , ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை... ஒண்ணை அழிச்சாலும், ஒரு குலத்தையே நாசம் பண்ணின மாதிரி ..."

 பூரான் - ஒரு விஷ ஜந்து. அந்த உயிரிடமும் கருணை , பெரியவாளுக்கு.


இதைப் போல பல அனுபவங்கள் இந்த புத்தகத்திலே காணப் படுகின்றன. ஒவ்வொரு அனுபவமும் , நம்மை பரவசப் படுத்திடக் கூடியவை.


புத்தகத்தின் பெயர் :  கச்சிமூதூர் கருணாமூர்த்தி 


ஆசிரியர்
 ஸ்ரீ மடம் பாலு தந்து உதவிய செய்திகளுக்கு , நிகழ்ச்சி வடிவம் கொடுத்துத்   தொகுத்தவர் சத்யகாமன் 

பதிப்பகம் :
இலக்கியப்பீடம் பதிப்பகம்
3 , ( பழைய எண் : 2 ) ஜெயசங்கர் தெரு,
மேற்கு மாம்பலம் , சென்னை
போன் : 23712485
முதற்பதிப்பு :  2008
விலை : ரூ.100 /-




திங்கள், 28 மே, 2012

பாலியல் தளங்களுக்குத் தடா


இன்டர்நெட் பயன்பாடு அதிகரிக்கும் அதே நேரத்தில் பாலியல் தொடர்பான தளங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே வீடுகளிலும் பள்ளிகளிலும், குழந்தைகளை இது போன்ற பாலியல் தளங்களையும், ஏமாற்றும் தளங்களையும் அடையாளம் கண்டு பாதுகாப்பது சிரமமான காரியமாக உள்ளது.

இணையத்தில் கே9 வெப் புரடக்ஷன் (K9 Web Protection) என்ற பெயரில் இது போன்ற தளங்களை வடிகட்டும் சாப்ட்வேர் ஒன்று தரப்பட்டுள்ளது. இதன் தளத்தில் இந்த சாப்ட்வேர் தொகுப்பினை எப்படி டவுண்லோட் செய்து பயன்படுத்துவது என்று படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது.

முதலில் http://www.k9webprotection.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இந்த சாப்ட்வேர் புரோகிராமினை டவுண்லோட் செய்திடுங்கள். டவுண்லோட் செய்திடும் முன் உங்கள் பெயர், முகவரி போன்ற பெர்சனல் தகவல்கள் கேட்கப்பட்டு படிவம் ஒன்றில் நிரப்பி இணையத்தில் அனுப்ப வேண்டும். 

பின் கே9 தளம் நீங்கள் தந்த இமெயில் முகவரிக்கு ஒரு அஞ்சல் அனுப்பும். அதில் இந்த சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்த ஒரு கீ தரப்படும். சாப்ட்வேர் தொகுப்பினை டவுண்லோட் செய்த பின், அதனை இன்ஸ்டால் செய்திட வேண்டும். இந்த புரோகிராம் தானாகவே பாலியல் தகவல்கள் கொண்டுள்ள தளங்களைத் தடுத்துவிடுகிறது. 

இதில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் தளம் இடம் பெற்றால், அதனை அந்த பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம். தடை செய்யக் கூடிய பொருட்கள் குறித்த பட்டியல் ஒன்றும் தரப்பட்டுள்ளது.
கே 9 வெப் புரடக்ஷன் சாப்ட்வேர் இந்த வகையில் மிகவும் பயனுள்ள புரோகிராமாக உள்ளது. குழந்தைகள் மோசமான தளங்களைப் பார்ப்பதிலிருந்து தடுக்கிறது.


நன்றி : http://senthilvayal.wordpress.com

பதினான்கு உலகங்கள்


பூமிக்கு மேலே 7 உலகமும், பூமிக்கு கீழே அதாவது பாதாளத்தில் 7 உலகமும் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த 14 உலகங்களின் பெயர்கள் மற்றும் அதில் யார் வசிக்கிறார் கள் என்ற விவரங்கள் உங்களுக்கு தெரியுமா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பூமிக்கு மேலே உள்ள 7 உலகங்கள்:-

1) சத்தியலோகம் - பிரம்மன்,

2) தபோலோகம் - தேவதைகள்,

3) ஜனோலோகம் - பித்ருக்கள்,

4) சொர்க்கம் - இந்திரன் மற்றும் தேவர்கள்

5) மஹர்லோகம் - முனிவர்கள்,

6) புனர்லோகம் - கிரகங்கள், நட்சத்திர தேவதைகள்,

7) பூலோகம் - மனிதர்கள், விலங்குகள் (ஒன்று முதல் ஆறு அறிவு படைத்த உயிரினங்கள்).

பாதாளத்தில் 7 லோகங்கள் உண்டு. அவை வருமாறு:-

1) அதல லோகம், 2) விதல லோகம் - அரக்கர்கள்,

3) சுதலலோகம் - அரக்கர் குலத்தில் பிறந்தாலும் உலகளந்த நாயகனால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி,

4) தலாதல லோகம் - மாயாவிகள்,

5) மகாதல லோகம் - புகழ்பெற்ற அசுரர்கள்,

6) பாதாள லோகம் - வாசுகி முதலான பாம்புகள்,

7) ரஸாதல லோகம் - அசுர ஆசான்கள்.



நன்றி : http://senthilvayal.wordpress.com

சனி, 26 மே, 2012

ஸ்ரீமதே ராமானுஜாய நம:




நமது சனாதன தர்மத்திலே மூன்று முக்கிய ஆச்சார்யர்களில் ஒருவரானவர்  ஸ்ரீ ராமானுஜ ஆச்சார்யார் ஆவார். தமது குரு தமக்கு அளித்த எட்டெழுத்து மந்திரத்தினை , உலகுக்கெல்லாம் உவந்தளித்த உன்னதனமானவர். 

ஸ்ரீ  ராமானுஜரின் கையெழுத்து பிரதி ஒன்று சமீபத்திலே   கிடைக்கப் பெற்றேன். இந்த கையெழுத்து  ஒரு வெள்ளை பேப்பரில் பிரிண்ட் அவுட் செய்யப்பட்டு  இருந்தது. ஏதோ ஒரு ஆலய கல்வெட்டிலே இருக்கக் கூடிய இந்த கையெழுத்தினை ஸ்கேன் செய்து , பிரிண்ட் அவுட் எடுத்துள்ளார்களாம். 

இந்த வெள்ளை காகிதத்திலே நமது தீராத கோரிக்கைகளை  எழுதி , ஸ்ரீ  ராமானுஜரிடம் பிரார்த்தனை செய்து , நமது வீட்டு பூஜை அறையிலே இதை வைத்து வழிபட்டுவர , நமது கோரிக்கைகள் அதிவிரைவில் நிறைவேறுவதாக கூறுகிறார்கள். 

எனக்குக் கிடைக்கப் பெற்ற , இந்த மகத்துவம் எல்லோருக்கும் சென்று அடைய , ஸ்ரீ  ராமானுஜரின் வழியிலே, பக்தி யுகத்திலே இதை வெளியிடுவதை  எனது பாக்கியமாகக் கருதுகிறேன். இதன் பலன்கள் அனைத்தும் ஸ்ரீ ரமானுஜரையேச் சாரும். 

தேவைப் படுவோர்  ஸ்ரீ  ராமானுஜரின் கையெழுத்தினை டவுன் லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து பயன் படுத்திக் கொள்ளுங்கள். 





சனி, 12 மே, 2012

அருப்புகோட்டை - வள்ளலார் அறக்கட்டளை


திரு அருட்பிரகாச வள்ளலார் காட்டிய வழியினில் , விருதுநகர் மாவட்டம் , அருப்புகோட்டையிலே "வள்ளலார் அறக்கட்டளை "  என்ற  ஒரு அமைப்பு இயங்கி வருகிறது . திரு.வேல்முருகன் எனும் ஆசிரியர் ஒருவரின் அரும்பெரும் முயற்சியினாலே இந்த அமைப்பு துவங்கப்பட்டு , நன் முறையினில் இயங்கி வருகிறது.

இந்த அமைப்புக் குறித்த சிறிய படக் காட்சி தொகுப்பினை வழங்குவதில் "பக்தி யுகம்"  பெருமை கொள்கிறது.

படக் காட்சியினைக் காண கீழே கிளிக் செய்யுங்கள் .


வியாழன், 10 மே, 2012

எங்கே இருக்கிறாய் ?

எங்கே இருக்கிறாய் என்னவனே ?
நாளும் வேதனையிலே தவிக்கும்
என் நிலை அறியாயோ?

காலை முதல் மீண்டும் காலை வரை
காத்திருக்கிறேன் உனக்காக .

என்ன வேலை செய்தாலும்
கதுபினில் ஒதுக்கிய கருப்பட்டியாக
உன் நினைவு உள்ளுக்குள்
இருந்துக் கொண்டு தான் இருக்கிறது .


"எப்போதும் உன்னோடுதான் இருக்கிறேன் " என்றாயே ?
அது பொய்யா ?
என் வேண்டுதலை ஒத்தி வைக்க நீ செய்த தந்திரமா ?

புழுங்கும் அறையினில்
சாவி துவாரம் வழி வரும் காற்றாய்
உன் ஸ்பரிசத்தை எப்போதாவது
நான் உணராமல் இல்லை .

ஆனால் ...
அக்கினி நட்சத்திர பகல் நேர நெடும் பயணத்தில்
குவளை தண்ணீர் குடிக்க போதுமோ ?

நான் கடந்து வந்த பாதையின் கறைகள்
என் பாதங்களில் ஒட்டி இருப்பதை
நீ அறிந்து இருந்தும்  தானே
என்னை "வா" என அழைத்தாய் !

உன் அன்பின் நதியினில்
கால் கழுவி
முகம் துடைத்து
அங்கம் முழுதும்  நனைய
அன்பனே ! அன்பனே ! என
உன்னுள் மூழ்கி குளித்து
உன்னுள் கரைந்திட  துடிக்கிறேன் .

இறைவனே ! இறைவனே !
வா ! விரைவில் வா !
என் ஒவ்வொரு அணுவிலும்
உன்னை நிரப்பி
முற்றிலும் நீயாகிவிடு !