சனி, 11 பிப்ரவரி, 2012

சித்தர்கள் தரிசனம் # 5

ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகளின் லீலைகள்


அருப்புக்கோட்டையில் அருளும் ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகளின் லீலைகள் 

ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகளின் சமாதியில் பூஜை செய்யும் திரு.காமராஜர் என்பவர் கூறும்போது 

" சுவாமிகள் அடக்கம் ஆகி தற்போது 95 வருடங்கள் ஆகின்றன. சுவாமிகள் ஒரு சாதாரண நெசவாளர் குடும்பத்தில் பிறந்துள்ளார்கள். சுயமாக ஆன்ம ஞானம் பெற்ற சுவாமிகள் , இல்லறத்தார் கடமையையும் தொடர்ந்துள்ளார்கள்.  

அந்நாளில் அவர் வாழ்ந்த பகுதியிலே , ஊர் மக்களின் பயன்பாட்டிற்காய் இரண்டு கேணிகள் தோண்டும் பணியினை , சுவாமிகள் தாமாகவே செய்து உள்ளார்கள்.

தினமும் கேணி வெட்டி முடிந்தவுடன் , கூலி ஆட்களுக்கு பணம் தர வேண்டுமே ? ஆனால் கேணி தொண்டுவோருக்கு கூலி கொடுக்கும் அளவுக்கு அவரிடம் பணம் கிடையாது.  என்ன செய்வது ?

தினமும் மாலையில் கூலி கொடுக்கும் நேரத்தில் சுவாமிகள்  தனது தலைப்பாகையில்  கையை  விட்டு பணம் வரவழைத்துக் கொடுப்பார்களாம். 

இதைப் போலவே , அருப்புக்கோட்டை தேவாங்கர் சமுதாயத்திற்காய் ஸ்ரீ சௌடாம்பிகை ஆலயம் எழுப்பும் காலத்தே , சமுதாய பெரியவர்கள் சுவாமிகளிடம் வந்து , ஆலயம் எழுப்பிட சுண்ணாம்பு வேண்டும் எனக் கேட்டு உள்ளனர்.

 சுவாமிகளும் மூன்று கோட்டை  சுண்ணாம்பு தருவதாகக் கூறி, குறிப்பிட்ட நாளில் வரும்படி கூறி அனுப்பியுள்ளார்கள். 

அவர்களும் அந்நாளில் வந்தபோது , சுவாமிகள் மூன்று கோட்டை சுண்ணாம்பைக் கொண்டுசெல்லும்படிக் கூறி உள்ளனர். 

 அவர்களோ .....
" சுவாமி !  தாங்கள் கோபுரம் கட்ட நூறு கோட்டை சுண்ணாம்பு அல்லவா தருவதாகக் கூறினீர்கள் ? நாங்களும் அதை நம்பி அல்லவா வந்தோம் "  என வினவி உள்ளனர். 

 சுவாமியும் தயங்காமல் 
"அப்படியா கூறினேன் ? சரி நீங்கள் மற்றொரு நாளில் வாருங்கள்"
எனக் கூறி ,தானே தனி ஆளாய் சுண்ணாம்புக் காளவாய் அமைத்து , நூறு கோட்டை சுண்ணாம்பையும் கோவில் கோபுர பணிக்குக் கொடுத்து இருக்கிறார்கள்.

நாளும் இறை பணியிலும் , இறை நினைவிலும் காலம் கழித்த சுவாமிகளிடம் , அவரது மனைவி வந்து 
                      " நாளும் இறை நினைவிலேயே இருந்தால், நம் உணவிற்கு என்ன வழி ? இன்று சமைக்கக் கூட ஒன்றும் இல்லை " 
 எனக் கூறி வருந்தி உள்ளார்.

 சுவாமியோ
" அடடா நீ என்ன இப்படி கூறுகிறாய் ?  சமையல் அறை சென்று பார் , சமயல் முடிந்து பதார்த்தங்கள் எல்லாம் தயாராக இருக்கின்றனவே "
எனக் கூறியுள்ளார்கள்.

அவர் மனைவியும் சமையல் அறைக்குள் சென்றுப் பார்த்தால் , அப்போதுதான் சமைத்து இறக்கியதுப் போலே உணவு வகைகள் எல்லாம் சுட சுட இருந்துள்ளன.  தன் தவறை உணர்ந்து அவர் சுவாமியிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். 

இன்றளவும் தன்னை நம்பி வருவோரின் துயர் தீர பல வழிகளிலும் அருள் புரிகின்றார்கள் " என பக்தியோடுக் கூறினார். 
 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக